-டி.கே.ரெங்கராஜன் இலங்கைத் தமிழர் பிரச்னை, இந்த நூற்றாண்டின் பெரும் துயரம்' என்பது வேதனையான உண்மை. அதிகாரம், மொழி, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை, சிங்கள மேலாதிக்க ஆட்சியாளர்களால், இலங்கையின் பாரம்பரியத் தமிழ் மக்களுக்குத் தொடர்ந்து மறுக்கப்பட்டது. இந்த அடிப்படை உரிமைகளுக்காக, முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அமைதி வழியில் போராடியவர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நிலை உருவானதற்கு சிங்கள மேலாதிக்கம்தான் காரணம் என்பதை மறுக்க முடியாது. 2009-இல் ஏற்பட்ட மிகப்பெரிய நாசத்திற்குப் பின் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. தங்களின் உரிமைகளை நிலைநாட்டிடவும், வாழ்க்கைத் தேவைகளுக்காகவும் இன்றும் இலங்கைத் தமிழ் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். "சமரசம் என்பது ஒரு தவறான சொல்' என்று கருதலாகாது என விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் குறிப்பிட்டார். இந்த அணுகுமுறையை புலிகள் இயக்கத்தினரும் பின்பற்றி இருக்கலாமோ என்ற கருத்தைப் பலர் வெளிப்படுத்தி இருப்பது தமிழ்ச் சமூகம் நன்கு அறிந்த ஒன்று. விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் உருவாக இருந்த பல சமரசத் தீர்வுகள் தட்டி விடப்பட்டது